Sunday, 19 October 2025

கலைவாணி

அன்புத் தோழி கலைவாணி
அப்படியென்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம் போய்
அதிர்ச்சியடைய வைத்தாயே

தாமதமாக எழுந்து
அவசரமாக கிளம்பும் மகன்
காலை உணவின்றி
வெளியேறும் நேரம்
ஒரு வாய் சாப்பிட்டுப் போடா
என கதவு வரை  கத்திப் பின்செல்ல
நீயில்லாமல் அவன்
கண்ணீரோடு போவானே
அவனுக்கு எப்படி
ஆறுதல் சொல்வோம்?

உன் ஞாபகம் அலைமோதும் வேளையில்
அம்மா அம்மா நீ எங்கே அம்மா
உன்னைவிட்டா எனக்கு யாரு அம்மா பாடலும்
ஆசைப்பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா பாடலும்
உன் மகனின் மியூசிக் ஆல்பத்தில்
தவறாமல் ஒலிக்குமே
அதைக்கேட்கும்போதெல்லாம்
அவன் கன்னங்களில் கண்ணீர் வழிந்து ஓடுமே
அதை எப்படி தடுப்போம் நாங்கள்?

செல்போனை மறந்து
டேபிளில் வைத்துவிட்டு
வாசல் வரை சென்ற உன் கணவர்
திரும்பி வர சோம்பேறிப்பட்டு
சத்தமாக உன் பெயர் சொல்லி அழைத்து
போனை எடுத்துவர சொல்வாரே
மறந்த பொருளை எடுத்து தர
நீயில்லை என்பதை உணர்ந்து
கண்கலங்கி நிற்பாரே
அவருக்கு எப்படி
ஆறுதல் சொல்வோம்?

கோவிலிலும் திருமண விழாக்களிலும்
பட்டு உடுத்தி வரும் பெண்ணைக் கண்டால்
இதே மாதிரிச் சேலை கலையிடமும் இருந்ததே என உன் கணவர் நினைவில்
வலம் வருவாயே...
பாத்ரூம் டைல்ஸில் ஒட்டிய பொட்டும்
அலமாரியில் அடுக்கப்பட்ட துணிகளும்
தவறாது உன் நினைவை வரவழைக்குமே
இதை எப்படித் தடுப்போம் நாங்கள்?

கல்லூரிக் கேபினில் அன்றாடம்
நீ அமரும் நாற்காலி
பத்து நாளாக கலையைக் காணோம்
உனக்கு எதுவும் விசயம் தெரியுமா என
மேஜையிடம் விசாரிக்குமே
நீ வரவே போவதில்லை என
நாற்காலிக்கு எப்படி
செய்தியை தெரிவிப்போம்?

உன்னிடம் படித்து முடித்து
உயர்நிலைக்கு போன மாணவன்
கல்யாண அழைப்பிதழ்
கொடுக்க வந்து நிற்பானே
நீயில்லை எனத் தெரிந்து
கலங்கி நிற்பானே
அவனுக்கு எப்படி
ஆறுதல் சொல்வோம்?

உன் வழிகாட்டுதலில்
முனைவர் பட்டம் பெற்ற
கலைச்செல்வி மற்றவரிடத்தில்
தன்னை அறிமுகப்படுத்த
டாக்டர் கலைச்செல்வி எனும்போது
டா...க்...ட...ர்.... என இழுப்பாளே
குரல் தழுதழுத்து அவளுக்கு
தொண்டை அடைக்குமே
அவளை எப்படி சமாதானப்படுத்துவோம் நாங்கள்?

அவசரமாக ஏன் சென்றாய் தோழி
அப்படி என்னதான் வேலையோ
மேலோகத்தில்!

சரி போனது போனாய்
அங்கே நிம்மதியாக இரு!
நாங்கள் உன்னை
பார்க்க வரும்வரை
அங்கொரு D Block
தயார் செய்து வை!
ஆசையோடு விளையாட
ஊஞ்சல் கட்டி வை!
ஆனந்த விகடன் வாங்கி வை

எமனையும் ஆட்சி செய்
உன் மாறாத புன்னகையால்!

நீ எங்கள் பார்வையில்
இருந்து மறைந்திருக்கலாம்,
ஆனால் எங்கள் இதயங்களிலிருந்து ஒரு போதும் இல்லை.
நீ நிம்மதியாக ஓய்வெடு,
நீ விட்டுச் சென்ற அன்பிலும்
உன் நினைவுகளிலும்
நாங்கள் ஆறுதல் பெறுவோம்.

நன்றி.

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...