Saturday 23 April 2022

கசிவு

நீ ஒன்றும் அப்படி
அழகு இல்லை
ஆனால் அதுஒன்றும்
குறையுமில்லை
பாட்டு ஞாபகம்
உனை பார்க்கும்போது
புவி ஈர்ப்பு விசை
கண் ஈர்ப்பு விசை
எது பலமானது
எனக்குள் பட்டிமன்றம்

நூறு மைல் வேகம்
நொடியில் இழுக்கிறாய்
முத்துப்பல் வரிசைக்கு
எத்தனைபரிசு கேட்பாய்
கருத்தில் நிறைந்து
கழுத்தை நெரிக்கிறாய்
கண்திறந்ததும்
காட்சிப்பிழையாய் நீ

Socha nahi achaa buraa
Fatum ingenium Est
Stand out of our light
Never let me go
In the mood for love
Giftsundoku
அறிமுக வரிசையில்
இன்னும் எத்தனை

ஒளியார் முன் ஒள்ளியர் 
பொருட்பெண்டிர்
பொய்ம்மை முயக்கம்
வள்ளுவரும் வந்து
திநகரில் நின்றார்
எண்ணம் எழுத்து
எதைக்கொண்டு ஈர்க்கிறாய்
உன் தமிழுக்கு
மதுவென்று பேர்
உன் தமிழே
போதும் என் பேறு
எட்டாக் கனியாய் 
இதயத்தை கொய்தாய்


சம நீதி


சென்ட் வாசனை
ரொம்ப பிடிக்கும்
அலமாரியில் இருந்தது 
தடவிக்கொண்டாள்
பயங்கரமாக திட்டு
இதை நீ போட்டுக்கொண்டால்
ஆண் அக்ரஸ்ஸிவ் ஆவான்
காரணம் சொன்னார்
நீங்கள் மட்டும் போடலாமா
பெண் அக்ரஸ்ஸிவ் 
ஆகமாட்டாளா கேட்டாள்
எனக்கு அதிகம் வேர்க்கிறது 
வாடை போக தேவை என்றார்
ஆண் வேர்வைக்காக போட்டால்
பெண் வாசத்திற்காக 
ஏன் போடக்கூடாது? 

மீறி ஒருநாள் போட்டதும்
நடத்தை சரியில்லைடி
கம்ப்ளெயின்ட்  தைத்தது! 

என்றேனும் ஒருநாள் 
அவரே வாங்கி வந்து 
உனக்கு பிடிக்குமே
போட்டுக்கோ சொல்வார்
எதிர்பார்ப்பில் பெண்! 

படிக்கிற பிள்ளைக்கு
மேக்கப் எதற்கு
அப்பா தடுத்தார்
பாடம் சொல்பவளுக்கு
சென்ட் எதற்கு
கணவன் கேட்டார்
இந்த வாசம் பிடிக்கலைமா
அருகில் படுத்த 
மகன் சொன்னான் 

எனக்கு பிடித்த வாசனை 
எப்போது தான் நுகர்வது? 

இன்னொரு பெரியார்
பிறக்கணுமோ? 

Tuesday 19 April 2022

கனிமொழி


கனிந்த மொழி தமிழை 
உரசி பார்த்த காயை
ஆத்மநிர்பர் வரலை
தமிழிழே பேசவா என
கனிந்தமொழியால்
வடக்கன் வாயை 
மூடச்செய்த 
இனிய மொழியாள் 

தமிழ் வளர்த்த தந்தை
இனம் காக்கும் தனயன்
பெரியாரின் நீதி
வழிமொழிந்த பாடங்கள்
கசடற கற்று தேர்ந்து
சரியான நேரத்தில்
தெளிவான கணை தொடுத்து
பாராளுமன்றத்தில் 
போராடும் மொழியாள் 

வடக்குக்கு வாரிக்கொடுத்து
தெற்கிற்கு கிள்ளிக்கொடுத்து
வஞ்சம் செய்தல் சரியோ
மையத்தை சாடி
துவைத்து தொங்க விடும்
பொங்கும் மொழியாள் 

விளிம்புநிலை மனிதனே
எப்போதும் குற்றவாளி 
எண்ணுகிற மாயை
ஏன் என கேட்கும்
மூது மூளையுள்ள
கனன்ற மொழியாள் 

தோப்போடு இருந்தாலும்
தனித்துவமிக்க மரமாக
வாழவும் வளரவும்
தாகத்தோடு நீர் தேடும்
ஆணி வேர் தாவரம்!


அக்கா என அழைக்கவா
அம்மா என அழைக்கவா
மேதகு என அழைக்கவா
குழப்பத்தில் பின்தொடர்வோர் 

பெண்ணாய் வெல்க !
விண்ணை தொடுக! 

Monday 18 April 2022

அழைப்பிதழ்

பால்ராஜ் மகன் கல்யாணம்
சோலங்கி மகள் கல்யாணம்
வெங்கடேஷ் வரவேற்பு
திருமுருகன் பிரிவு உபச்சாரம்
எத்தனையோ விருந்துகள்
அழைப்பிதழ் மேஜையில்
அனந்தா வித் பேமிலி
அழகாய் எழுதியிருக்கும் 

மகளின் கேள்வி
ரெட் சாஸ் பாஸ்தா
ஒய்ட் சாஸ் பாஸ்தா
எதும்மா வச்சிருப்பாங்க
மகனின் கேள்வி
சிக்கன் 65 இருக்குமோ
சாஹி பன்னீர் இருக்குமோ
தெரியலடா என்பேன்
எனக்குள்ளும் கேள்வி
எத்தனை வகை இருக்கும்
தட்டு நிறைய உணவு 

மாலையும் வந்தது
கதவை சாத்திக்கொள்
கல்யாணத்திற்கு போகிறேன்
செய்தி சொல்லி போவார் 

புலம்பெயர்ந்த மனைவியற்கு
உள்ளூர் விருந்தும் இல்லை
அயலூர் விருந்தும் இல்லை
தொண்டையை ஏதோ அடைத்தது

Sunday 17 April 2022

E 2 பிரியாணி



E 2 பிரியாணி
Eat eat சொன்னது
பிரிஞ்சி இலையும்
பிரியாணிமசாலாவும்
பட்டிமன்றத்தில்
எதிரும் புதிருமாய்
சுவைக்கு காரணம் 
நானே சொல்ல
அங்க என்னடா சத்தம்
பாப்பையா சொன்னார்
சமைத்தவரே காரணம்
சத்தமாய் தீர்ப்பு தந்தார்
கைவழியே நுழைந்து
வயிறு மட்டுமா நிறைந்தது
உள்ளமும் அல்லவோ
அன்பிற்கு நன்றி
உறவுக்கும் நன்றி 

- தெய்வானை 

Sunday 10 April 2022

திருமலை மாமா



வார இறுதியில் வந்துசெல்லும்
அக்கா மகளுக்கு
தலைக்கு தேங்காய் எண்ணையும்
துவைக்க நிர்மா சோப்பும்
குளிக்க லைபாய் சோப்பும்
கொரிக்க மிக்சரும் முறுக்கும்
வாங்கித்தந்து பஸ் ஏற்றிவிடுவார்
சம்பூர்ணா தியேட்டரில்
எங்கேயோ கேட்ட குரல்
லட்சுமி தியேட்டரில் 
எங்க ஊரு பாட்டுக்காரன்
இன்னும் பல
ராமராஜன் படங்கள்
சனிக்கிழமை ஸ்பின்னிங் மில் 
என்னையும் அழைத்துசெல்வார்
மதியம் பரோட்டா குருமா
இரவு தோசை வாங்கித்தருவார்
ஞாயிறு காலையில் சுடச்சுட
எலும்புக்குழம்பும் இட்லியும்
இரவு 9 மணிக்கு 
கண்ணம்மா அக்கா வீட்டிற்கு
போகிறேன் என்றால்
காலையில் போ என்ன அவசரம்
என்று சொல்லி அனுமதிக்கமாட்டார்
டாக்டரிடம் அழைத்து சென்று
ஒல்லியாகவே இருக்கிறாள்
உடம்பே தேறவில்லை
என்னன்னு பாருங்க என்பார்
பஸ் ஏற்றிவிட வந்தால்
பத்தடி தள்ளி நிட்பார்
ஏன் மாமா என காரணம் கேட்டால்
உன் கூட படிக்கும் பிள்ளைகள்
பார்த்தால் அசிங்கமாய் நினைப்பார்கள்
என்று சொல்லி தூரமாய் நிட்பார்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்
தோற்றத்தால்  குறைந்தவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்
அன்பால் நிறைந்தவர்
நேர்மறை எண்ணங்களால்
நிரம்பி வழிந்தவர்
தவறு காணும்போது
வலிக்காமல் சொல்பவர்
இனிய நினைவுகள் 
சொத்தாக சேர்ப்பவர் 

நானும் ஒருநாள்
யாராலும் நினைவுகூரப்படுவேனா?
எத்தனை மனிதரில்
கரைந்திருப்பேன்?

அய்யய்யோ கடவுளே
அக்காவுக்கு தங்கைக்கு
அத்தைக்கு அம்மாவுக்கு
அண்ணிக்கு பெரியம்மாவுக்கு
தோழிக்கு ஆசிரியைக்கு
ஒன்றும் தீங்காய் பெரிதாய்
நடக்கக்கூடாது என 
ஆத்மார்த்தமாய் பிரார்த்திக்கும்
உதடுகளும் உள்ளங்களும்
சம்பாதிப்பேனோ இல்லையோ !

ஒரு ஜீவன் ஆமென்றாலும்
நான் வாழ்வை வென்றவளாவேன்!

10/04/2022/16:29 PM

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...