செல்வத்துள் எல்லாம்
சிறந்த செல்வம் நீ
வாரி அணைக்கையில்
கள்ளூரும் இன்பம் நீ
பொக்கை வாய் காட்டி
புன்சிரிப்பு சிரிக்கையில்
சிலையும் உன்னோடு
சேர்ந்து சிரிக்குமே
இரவு தூக்கம்
திருடிய இனிய கள்வனே
ஓய்வு நேரம் குறைத்து
உன் பின்னே ஓட வைத்து
விளையாட்டு காட்டி
வேலை வாங்கிய
முதலாளி சிறுவன் நீ
ஒரு வருடத்தில்
ஓராயிரம் இன்பம்
எண்ணவோ
சொல்லவோ
என்னால் ஆகாது
ஆனாலும்
அத்தனையும் சுகம்
பொறுப்பற்ற பறவையாய்
பறந்து திரிந்த
தாயை தந்தையை
பொறுப்புள்ள பெற்றோராக
மாற்றிய ஆசிரியன் நீ!
வாடாத மலரே
வாசமிகு மல்லிகையே
வாழ்வாங்கு வாழ்க நீ
கருவில் சுமந்தவள்
கனவில் சுமந்தவர்
இருவரும் கர்வப்பட
உற்றாரும் உறவினரும்
உன்னால் பெருமையுற
கற்றோரும் சான்றோரும்
உனக்கு புகழ்மாலை சூட்ட
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ்க வாழ்கவே!