Friday 18 November 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கபடில்லா நட்பு
கழுபிணியிலாத உடல்
சலியாத மனம்
தாளாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா  வாழ்வு
அத்தனையும் பெற்று
வாழ்வாங்கு வாழ்க!



உன் இதயத்துடிப்பை
கேட்டு பழக்கப்பட்ட பேனா
மை திறவாமல்
மௌனியாய்  இருக்கிறது


உனக்கு தெளிந்த பார்வை
தந்த கண்ணாடியோ
தூசி படர்ந்து தூங்குகிறது



நீ விரும்பி அணியும்
டைட்டன் வாட்ச்
ஓட விருப்பமின்றி
உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் மணிக்கட்டின்
பல்ஸ்  கேட்டுத்தான்
விழிப்பேன் என்று
வீம்பாய் படுத்திருக்கிறது

ரெக்கார்டிங் ரூம் கேமரா
கண்ணிமைக்காமல்
காத்திருக்கிறது
உன்னை மட்டுமே
படம் பிடிப்பேன் என்று!



உன் வாய்வழி பிரசவிக்க
ஊருக்குள் பிரச்சினைகள்
பல பதுங்கி கிடக்கின்றன
திருவாய்மொழி அலசும்
அத்தனை பிரச்சினையும்
தீர்வை நோக்கி நகர்கிறதே!


அமைச்சரும் அதிகாரியும்
ஆசுவாசமாய் திரிகின்றனர்
உன் கர்ஜனை கேட்காமல்
அறுபத்தைந்து நாட்களாய்
அமைதியாய் உறங்குகின்றனர்

எப்போது வருவாய்
ஏக்கத்தில் ரசிகர்கள்

யூ  ட்யூபும் புளித்தது
உன் குரல் கேட்காமல்
ட்விட்டரும் கசந்தது
உன் பதிவுகள் இல்லாமல்
நீலப்பறவை அன்றாடம்
புலம்புகிறது
என் நாயகன் எப்போது
வருவான் என
கடலூர் வந்து உனை
கேட்டதாமே
அவ்வளவு உறவா
அந்த நீலப்பறவை உனக்கு


போகட்டும் விடு
அத்தனையும்
சீக்கிரமாய் வந்துவிடு
செவி இன்பம் தந்துவிடு.
                 -  பிரியமான தோழி
                     சு.தெய்வானை

Tuesday 15 November 2022

#குறள்_1090 : உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்,கண்டார் மகிழ்செய்தல் இன்று

உண்டால் மயக்கம்
கண்டால் மயக்கம்
முதலாவது குளிர்ச்சி
இரண்டாவது கிளர்ச்சி
கள் குடித்தால்
நிலைதடுமாறாது
காதலி அவளை கண்டால்
மனம் நிலைகொள்ளாது
கருப்புவெள்ளை கள்ளே
காவியம் படைப்பது!
நீள்வட்ட பானைக்குள்
இருந்துகொண்டு
நித்தமும் போதை தருவது

Monday 14 November 2022

#குறள்_1089 : பிணையேர் மடநோக்கு நாணும் உடையாட்,கணியெவனோ வேதில தந்து

கண்களால் போரிட்டு
நாணத்தால் எனை
மண்டியிட வைப்பவளுக்கு
வைரமாலை எதற்கு?
ஓ எனக்கு முன்னர்
அதை சிறைபிடித்தாயோ
இருந்தாலும் அம்மாலை
அதிர்ஷ்டமிக்கது
என்னைமுந்திக்கொண்டு
உனை தழுவிக்கொண்டதே!

Sunday 13 November 2022

#குறள்_1082 : நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு,தானைக்கொண் டன்ன துடைத்து

இடதாய் தலைசாய்த்து
குறும்பாய் பார்த்து
மனதுக்குள் மழை தந்தாய்
இடுப்பில் கைவைத்து
முழுதாய் முறைக்கையில்
நானொன்றும் செய்யலடி
கதற வைத்தாய்
வலப்பக்கம் திரும்பி
எங்கோ வெறிக்கையில்
சாரிடி சாரிடி நூறுமுறை 
சொல்லவைத்தாய்
கண்கள் சந்தித்த
நொடிப்பொழுதில்
தீராத நோயுற்றேன்
பாவம் நான் விட்டுவிடு!
எத்தனை முறை 
போர்தொடுப்பாய்
எத்தனை வகை
சேனை வைப்பாய்.


#குறள்_1083 : பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்,பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எமனும் அவளும்
ஒரு ஜாதி
என்னை கொல்வதில் 
சரிஜோடி
வாழ்ந்தது போதும்
வா என்றான்
வாழ்ந்து பார்ப்போம் 
வா என்றாள்
கருத்த உருவம்
கயிறை வீச
கரியவிழிகளோ
வேலை வீசின
இருவரும் எனக்கு
நிம்மதி தருவர்
ஏனோ என்மனம்
கருவிழியை சேர்ந்தது

(2)
கொஞ்சியும் கெஞ்சியும்
நிதானமாக கொல்வாள்
நித்தமும் முத்தம்
சொர்க்கவாசல்
நித்தமும் யுத்தம்
மரணவாசல்
இன்ஸ்டால்மென்டில்
இனிப்பும் கசப்பும்
எமனே காதலியாய்
எனை ஆளவந்தது

#குறள்_1085 : கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்,நோக்கமிம் மூன்று முடைத்து.

(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண் 
இருவருக்கும்
யார் உயிரை 
முதலில் எடுப்பது என்று!

(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை

-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!

#குறள்_1086 : கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்,செய்யல மன்இவள் கண்.

கோபம் வழிகின்ற
தாபம் தருகின்ற
கண்ணிடமிருந்து
எனை காப்பாற்ற
புருவமே உனக்கு
கையூட்டாக
லேக்மீ மை தரவா
நைக்கா மை தரவா
அவள் கண்கள்
எனை திண்ணும் முன்
கரைசேர்த்து காப்பாற்று!
கண்களுக்குத்தான்
கருணையில்லை
வில்லே உனக்குமா?

முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கினதலைமுடி சான்ற தந்தழை உடையைஅலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு.

பெரிய மனுஷி
ஆயிட்டே
ஊர்சுத்த 
போவாதடி
முற்றத்தில்
இருந்து
மூதாட்டியின்
கதறல்!

#குறள்_1087 : கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்...படாஅ முலைமேல் துகில்.

முகப்படாம் 
பிளிறின் வழியை
நேராக்கும்
அங்கனம்
முகடுகளை
மூடுபனியால்
மறைத்து
வேலையை பார்
என்கிறாளோ
பாகனும்
பாவையும்
ஸ்ட்ரிக்ட்  டீச்சர்ஸ்
கவன சிதறலை
சீராக்குபவர்கள்

குறள்_1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்,நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களம் வெல்லும்
என் வலிமை
உன் நெற்றிக்களம்
நோக்கி நடுங்குவதேன்
பகைவனின் பரந்த
களம் காட்டிலும்
உன் நுதல்களம்
சிறிதுதானே
கேசங்கள் ஒவ்வொன்றும்
உனைகாக்க போரிடுமோ
கிட்டவரும் ஆடவரை
சூரியகண்கள் எரித்திடுமோ
வலிமைமிகு என் கைகள்
வழுக்கி விழுந்து
உடைந்திடுமோ
இத்தனை மென்மை 
ஏன் வைத்தாய்

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!